தூரத்துக்கும் தேவன்

ஓளியின் வேகத்தில் மனிதன்

நம்மால் ஒளியின் வேகத்தை அடையமுடியுமா? அடைவது எப்படி? அடைந்தால் என்ன ஆகும்? ஒரு கிறிஸ்தவனாக இந்த அறிவியலைக் குறித்து நம்மால் சிந்திக்க முடிந்தால்?

பெரியப்பா மாதவன் பல வருடங்கள் முன் சொன்னது. “கடவுள் மிக வேகமானவர் என்று நினைக்கிறேன் பென்னி. அதனால்தான் அவரை நம்மால் பார்க்க முடிவதில்லை. வேகமாகச் சுற்றும் சைக்கிளின் ஸ்போக்ஸ் கம்பியை நம்மால் பார்க்கமுடிவதில்லையே. அதுபோலத்தான் கடவுளும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். அவருக்குக் இறை நம்பிக்கை இல்லை என்று நான் நினைத்துக் கேட்டபோது அவர் சொன்ன பதில் இது.

இனி கொஞ்சம் அறிவியல்:

இயற்பியலின் படி (குறிப்பாக ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் படி – Theory of Relativity), பொருண்மை (mass) கொண்ட எந்தவொரு பொருளும் ஒளியின் வேகத்தை அடைய முடியாது. அதன் காரணம் என்னவென்றால், ஒரு பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும்போது, அதன் பொருண்மை முடிவில்லாமல் அதிகரிக்கும். அந்த முடிவில்லாத பொருண்மையை மேலும் துரிதப்படுத்த முடிவில்லாத ஆற்றல் தேவைப்படும். இது நடைமுறையில் சாத்தியமற்றது.

ஆனால், ஒருவேளை கோட்பாட்டளவில் ஒளியின் வேகத்தை அடைய முடிந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்தால், சார்பியல் கோட்பாட்டின் விளைவுகள் இன்னும் தீவிரமாக இருக்கும்:

காலம் ஸ்தம்பித்துவிடும் (Time Stops): பயணம் செய்யும் பொருளுக்கு அல்லது நபருக்கு காலம் முற்றிலும் நின்றுவிடும். அதாவது, ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒருவர் அல்லது ஒரு பொருள், புறப்பட்ட புள்ளியில் இருந்து சேர்ந்த புள்ளி வரை எவ்வளவு தூரம் இருந்தாலும், அவருக்கு நேரம் என்பதே கடக்காது (கையில் கட்டியிருக்கும் அவர்களின் சொந்த கடிகாரத்தின் படி). வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான் காலம் சென்றிருக்கும்.

பொருண்மை முடிவில்லாமல் அதிகரிக்கும் (Mass becomes Infinite): இதுவே ஒளியின் வேகத்தை அடைய முடியாததற்கான முக்கிய காரணம். வேகம் கூடும்போது பொருண்மை கூடும் என்ற விதிப்படி, ஒளியின் வேகத்தில் பொருண்மை முடிவிலியாகிவிடும் (infinite).

நீளம் சுருங்கிவிடும் (Length Contracts): பயணம் செய்யும் திசையில் பொருளின் நீளம் சுருங்கி பூஜ்யமாகிவிடும். அதாவது, ஒரு விண்கலம் ஒளியின் வேகத்தில் சென்றால், பயணம் செய்யும் திசையில் அதன் நீளம் இல்லாமலாகிவிடும்.

முடிவில்லாத சக்தி தேவைப்படும் (Infinite Energy Required): மேற்சொன்னபடி, பொருண்மை கொண்ட ஒரு பொருளை ஒளியின் வேகத்திற்கு துரிதப்படுத்திக் கொண்டு செல்ல முடிவில்லாத ஆற்றல் தேவைப்படும். இது நடைமுறையில் சாத்தியமில்லை. முடிவில்லாத ஆற்றல் எவ்வளவு என்று தெரியாததால், அந்த ஆற்றலை அடைவது என்பதும் அர்த்தமற்ற ஒன்றாகிவிடுகிறது.

சுருக்கமாக, ஒளியின் வேகத்தை ஒரு பொருண்மையுள்ள பொருள் அடைய முடிந்தால், அந்தப் பொருளுக்கு காலம் நின்றுவிடும், அதன் பொருண்மை முடிவிலியாகும், மற்றும் அதன் நீளம் பூஜ்யமாகிவிடும். இது தற்போதைய இயற்பியல் விதிகளின்படி சாத்தியமற்ற ஒரு நிலை. ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடியவை ஒளியின் துகள்களான ஃபோட்டான்கள் (photons) மட்டுமே, அவற்றுக்கு ஓய்வு நேர பொருண்மை (rest mass) இல்லை.

ஆகவே, கற்பனையாக ஒளியின் வேகத்தில் ஒரு மனிதன் பயணித்தால், அவர் காலத்தை வென்று, இந்த அண்டத்தின் எந்த மூலைக்கும் உடனடியாகச் செல்ல முடியும். ஆனால், அவர் திரும்பி வரும்போது, தான் விட்டுச் சென்ற உலகத்தை முற்றிலும் மாறுபட்ட நிலையில் காண்பார். இது ஒரு அற்புதமான ஒன்றாகத் தெரிந்தாலும், சாத்தியமற்ற கற்பனையாகும்.

இனி பைபிள் சொல்வதைப் பார்க்கலாம்:

பெரியப்பா சொன்னதுபோல, கடவுள் வேகமானவர்தான். ஒளியைவிட வேகம் என்று வைத்துக் கொண்டால்கூட அவருக்கு மேற்சொன்ன இயற்பியல் விதிகள் பொருந்துகிறது. அவருக்கு காலம் என்பது இல்லை. காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது. பொருண்மை என்பது அவருக்கு இல்லை. அவர் தன் படைப்புகளுக்கு வெளியே இருப்பவர் – உள்ளே அவரது ஆற்றல் செயல்படுகிறது. நீளம் தூரம் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. அவர் தூரத்துக்கும் தேவன் என்று வேதம் சொல்கிறது. முடிவில்லாத சக்தி அவருக்கு மட்டுமே உண்டு.

இதெல்லாம் போக, தேவன் ஒளியாயிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. அவரே ஓளியின் மூலமும், ஓளியின் செயல்பாடும். ஐஸ்ண்டீனின் கோட்பாடை நம்பும் எவருக்கும் வேதத்தை ஒழுங்காக வாசித்தால், நம் தேவாதி தேவனின் பிரமாண்டம்தான் புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *